(இந்த அல்குர்ஆனை) மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படி தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும்இ ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வெரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)
கண்ணியமிக்க ரமளானில் கடைசிப்பத்தில் நாமெல்லாம் இருந்து வருகின்றோம். ரமளான் பிறை 27 என்றாலே சட்டென்று நம் நினைவுக்கு வருவது லைலத்துல் கத்ர் உடைய இரவுதான். பொதுவாகவே மற்ற நாட்களை விட ரமளானில் பள்ளிகளில் கூட்டம் நிரம்பி வழியும். அதிலும் பிறை 27 வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். மக்கள் வெள்ளத்தால் பள்ளிவாசலே திக்குமுக்காடிப் போய்விடும்.
காரணம் அன்று தான் ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலத்துல் கத்ர் உடைய இரவு என்று பரவலாக மக்களிடையே நம்பிக்கை நிலவி வருகின்றது. பல ஹஜ்ரத் மார்களும் பிறை 27 தான் லைலத்துல் கத்ர் என்று சொல்லி வருகின்றனர். சில அறிஞர்கள் பிறை 27 ல் இல்லை என்று மறுத்தாலும்,'பெரும்பாலான சான்றோர்களின் கருத்து' என்று சொல்லி மழுப்பி வருவதை பார்க்கின்றோம்.
























